ஆரல்வாய்மொழி அருகே மீண்டும் ஊருக்குள் வந்த கரடி கன்று குட்டியை கொன்றது: பொதுமக்கள் பீதி!!
ஆரல்வாய்மொழியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் முப்பந்தல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலுக்கு பின்புறம் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தார். நேற்றிரவு மாடுகளை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கன்றுகுட்டி ஒன்றை காணவில்லை.
அதை தேடி சென்றபோது, பண்ணையின் வெளிப்புறத்தில் அந்த கன்று குட்டி இறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த முருகேசன் அங்கும் மிங்கும் சுற்றிப்பார்த்தபோது, பண்ணைக்குள் ஒரு கரடி நிற்பதை கண்டார்.
பீதியில் உறைந்த அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஊருக்குள் வந்து பண்ணையில் கரடி நிற்பதாக ஊர் மக்களிடம் கூறினார். வனத்துறையினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
வன அலுவலர் சரவணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி பண்ணையை விட்டு நகர மறுத்து அங்குள்ள ஒரு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டது.
இதையடுத்து வன ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து கரடியை விரட்ட ஏற்பாடு செய்தனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பொய்கை அணை பகுதியில் நடமாடிய கரடி அண்ணன்–தம்பி இருவரை கடித்து குதறி காயப்படுத்தியது.
இப்போது ஊருக்குள் மீண்டும் கரடி புகுந்திருப்பது ஊர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating