ஈரோடு அருகே ஆற்று சுழலில் சிக்கி பலியான வாலிபர் உடல் மீட்பு!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30).
இவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள பட்டாசுபாளையம் என்ற இடத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இவரும் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலைபார்க்கும் சுப்பிரமணி (54) என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி மதியம் இளவரசனும், சுப்பிரமணியனும் மலையம் பாளையம் பகுதியில் உள்ள காரணாம்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஒரு அணையில் குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு இளவரசன் சென்று விட்டார். இதனால் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இவரது உடலை தண்ணீர் அடித்துசென்றது. இதை பார்த்த சுப்பிரமணி அதிர்ச்சியடைந்தார்.
இது பற்றி மலையம் பாளையம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதை யொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளவரசன் உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளவரசனின் உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது.
இளவரசனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இது குறித்து மலையம், பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலியான இளவரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடு முடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Average Rating