ஸ்டெம் செல் தானம்: குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பறந்து வந்து ஏழு வயது சிறுமியை காப்பாற்றிய நல்ல உள்ளம்!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசிக்கும் 7 வயது சிறுமி பிரியா ஷா, தலஸ்சேமியா நோயால் பாதிப்புக்குள்ளானாள். இதனால் உயிருக்கு போராடிய அவளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
பிரியாவின் குடும்பத்தை சேர்ந்த யாருடைய ஸ்டெம் செல்லும் பொருந்தாத நிலையில், மாற்று ஸ்டெல் செல்லை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரியா வசிக்கும் அதே அகமதாபாத் நகரை சேர்ந்தவரும், தற்போது துபாயில் வசிப்பவருமான கோபால் வச்சாணி தனது ஸ்டெம் செல்லை தானமாக தருவதாக கடந்த 2013 ஆம் ஆண்டே பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
அவரது ஸ்டெம் செல்லானது சிறுமி பிரியாவின் ஸ்டெம் செல்லோடு ஒத்துப்போனது. இது தெரிந்ததும் பிரியாவின் பெற்றோர் தங்களது செல்ல மகளின் நிலையை பற்றி கோபாலிடம் தொலைபேசியில் எடுத்துரைத்தனர். அனைத்தையும் கேட்ட கோபால், ‘உங்கள் மகளை காப்பாற்ற நான் உடனடியாக அகமதாபாத் புறப்பட்டு வருகிறேன்’ என்றார். சொன்னபடி துபாயிலிருந்து அகமதாபாத்துக்கு பறந்து வந்து தனது ஸ்டெம் செல்லை தானமாக தந்தார். உடனடியாக அதை பெற்று பிரியாவின் உடலில் மாற்று ஸ்டெம் செல்லை செலுத்தி அவளின் புது வாழ்வை துவக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிகிச்சைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரியாவின் பெற்றோர், ‘எங்களை பொறுத்தவரை கோபால் கடவுளுக்கு சமம்’ என்றனர். இதில் பெருமைகொள்ளத்தக்க விஷயம் என்னவென்றால் ஸ்டெம் செல் தானத்துக்கு முன்போ, பின்போ பிரியாவும், கோபாலும் சந்திக்கவில்லை என்பது தான். தானம் செய்யும் ஒருவர் ஒரு வருட காலத்துக்கு தானம் கொடுக்கப்பட்டவரை சந்திக்கக்கூடாது என்ற விதியிருப்பது தான் இதற்கு காரணம். உருவத்தால் இருவரும் சந்திக்கவில்லை என்றாலும், உள்ளத்தால் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating