பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கல்லூரி மாணவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று மாயமானார்.
இதுதொடர்பாக சந்தோஷ்குமாரின் தந்தை அர்ஜூனன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மகனுக்கு சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த கணபதி, செல்வராஜ், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க நிர்வாகி சிகாமணி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.
வறுமையை காரணம் காட்டி எனது மகனை அவர்கள் தவறான வழிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சந்தோஷ்குமாரை சிலர் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டதாக தகவல் வெளியானது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது சந்தோஷ்குமார் மாயமான வழக்கு தொடர்பாக கணபதி(39), செல்வராஜ்(55), சிகாமணி(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய தூண்டி விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா? சந்தோஷ்குமாரை மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டார்களா? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கைதான 3 பேரையும் கோவையில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கணேஷ்குமார், தருண் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கைதான செல்வராஜ் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் சுல்தான் பேட்டை.
கணபதி முன்னாள் போலீஸ்காரர் ஆவார். சிகாமணி கூலி தொழிலாளி ஆவார். கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேரையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள இவர்களுக்கும் சமீபத்தில் கோவையில் கைதான கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டு கும்பல் தலைவர் ரூபேசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகலாம் எனத்தெரிகிறது.
Average Rating