பாபநாசம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மனைவி–மருமகளிடம் நகை பறிப்பு!!
திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் திருச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகனுக்கும் கபிஸ்தலம் நாயக்கர் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் மகள் ரஞ்சிதாவுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார். அவருக்கு கடந்த 12–ந்தேதி தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 16–ந்தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவருடன் மாமியாரும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மனைவியுமான சாமியம்மாள் (45) என்பவரும் சென்று தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று இரவு அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து கொள்ளையன் ஒருவன் உள்ளே புகுந்தான்.
அவன் ரஞ்சிதா அணிந்திருந்த 13 பவுன் நகையை பறித்தான். பின்னர் சாமியம்மாள் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற போது அவர் விழித்து சத்தம் போட்டார்.
இருந்த போதிலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து கொண்டு பின் பக்கம் உள்ள கரும்பு தோட்டம் வழியாக கொள்ளையன் தப்பி சென்று விட்டான்.
பறிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இது குறித்து சாமியம்மாள் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார்.
பாபநாசம் டி.எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கொள்ளையனை பிடிக்க கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், சப்–இன்ஸ்பெக்டர் பகவதி, பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் இருதயராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
Average Rating