டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!
டெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற யோகாசன முகாமின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள முயன்ற பெண்ணின் விருப்பத்தை மோடி மிக பவ்யமாக தட்டிக்கழித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு தலைவர்களுடன் ‘செல்பி’ புகைப்படங்களை எடுத்து, அவற்றை தனது ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவரும் பிரதமர், இன்று காலை டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச யோகா தினத்தில் சிறப்புரையாற்றி விட்டு, யோகாசனம் செய்வதற்காக மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்.
அப்போது, தனது செல்போனுடன் பிரதமரை நெருங்கிய ஒரு பெண்மணி, அவருடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள விரும்பிய தனது ஆவலை தெரிவித்தார். அவருக்கு பவ்யத்துடன் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்த மோடி, அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார். பின்னர், துண்டை விரித்து தரையில் அமர்ந்து யோகாசனம் செய்யச் சென்ற மோடியின் அருகாமையில் அமர்ந்து அந்தப் பெண்மணியும் யோகாசனம் செய்ய முயன்றார்.
இதைக் கண்ட பிரதமரின் மெய்க்காப்பாளர்கள், அந்தப் பெண்ணை அங்கிருந்து அகற்றினார்கள். இதேபோல் மோடியுடன் ‘செல்பி’ எடுத்துகொள்ள முயன்ற இன்னொரு நபரையும் மெய்க்காப்பாளர்கள் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Average Rating