ராமநாதபுரத்தில் ஜெயில் முன் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம்!!
தன்னை கற்பழித்து ஏமாற்றிய சிறை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரத்தில் இன்று ஜெயில் வாசலில் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தீயணைப்புத் துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது மகள் யூசுலின் மேரி(வயது27). இவர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:–
திண்டுக்கல்லில் உள்ள சிறைக்கு கடந்த 2014–ம் ஆண்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றேன். அப்போது அங்கு சிறை காவலராக பணிபுரிந்த நெல்லை மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் அருண்குமார்(28) என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு எனது செல்போனில் ஆசைவார்த்தை கூறி அருண்குமார் அழைத்ததை தொடர்ந்து நான் சென்றேன். திண்டுக்கல் சிறைக்கு எதிரே உள்ள அறையில் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். அதன் பின்பு சிறை காவலர் அருண்குமாரை பலதடவை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் போலீசில் புகார் செய்தேன். ஏற்கனவே அருண்குமார் மீது திண்டுக்கல் கோர்ட்டில் 3 வழக்குகள் உள்ளன. வழக்குகள் இருந்த நிலையிலும் அருண்குமாரை, பதவிநீக்கம் செய்யவில்லை. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் வேலை செய்த சிறை காவலர் அருண்குமார், ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எனவே இங்கு வந்து உண்ணாவிரதம் இருக்கிறேன்.
ஆசைவார்த்தை கூறி என்னை மோசம் செய்து தவிக்கவிட்ட சிறை காவலர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் முதல்–அமைச்சர் வீட்டு முன்பு தீக்குளித்து உயிரை துறப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யூசுலின்மேரி ஜெயில் முன்பு உண்ணாவிரதம் இருப்பதை அறிந்ததும் பெண் போலீசார் உடனடியாக அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Average Rating