கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி: மற்றொருவர் உயிர் ஊசல்!
ஓக்கியம் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 30), முத்து(34) கூலித்தொழிலாளர்கள்.
இன்று காலை அவர்கள் துரைப்பாக்கம், ஆனந்தா நகர் 9–வது தெருவில் உள்ள சத்ய நாராயணன் வீட்டில் கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்றனர். ராஜேந்திரன் முதலில் தொட்டிக்குள் இறங்கியவுடன் மயக்கம் அடைந்தார். உடனே அவரை மீட்பதற்காக முத்து தொட்டிக்குள் இறங்கினார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் சத்ய நாராயணன் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கழிவு நீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்த ராஜேந்திரனை மிட்டனர். அவர் விஷ வாயு தாக்கி இறந்திருப்பது தெரிய வந்தது.
முத்துவின் உடல் நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating