நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் தலையை துண்டித்து கொலை – கணவர் போலீசில் சரண்!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது40). இவருடைய மனைவி குறிஞ்சி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். போஸ் ஊர், ஊராக சென்று பிறருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் தொழிலாளி ஆவார்.
அவ்வாறு வெளி ஊர்களுக்கு செல்லும்போது குறிஞ்சியும் போசுடன் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக திருவாரூரை அடுத்த வைப்பூர் சூரனூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஆடுகளை போஸ் மேய்த்து வந்தார். இதற்காக சூரனூரில் மனைவி குறிஞ்சியுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் குறிஞ்சி அடிக்கடி செல்போனில் பேசியதால் அவர் நடத்தையில் போசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று வைப்பூர் அருகே உள்ள சூரனூர் சட்டநாதவாய்க்கால் பகுதியில் போசும், குறிஞ்சியும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குறிஞ்சி செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போஸ் தான் வைத்திருந்த அரிவாளால் குறிஞ்சியின் தலையில் வெட்டினார். இதில் தலை துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதை தொடர்ந்து துண்டிக்கப்பட்ட குறிஞ்சியின் தலையுடன் நடந்து சென்ற போஸ் அதே பகுதியில் உள்ள வயலில் தலையை வீசினார். பின்னர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். சம்பவம் நடந்த இடம் வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் மகளிர் போலீசார் போசை, வைப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வைப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெட்டப்பட்ட தலை மற்றும் குறிஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating