ஒழிவார்களா பெருந்தீனி ஆசாமிகள்? -புதிய முறையில் ஒரு பூஜை
கோடம்பாக்கத்தில் டெக்னீஷியன்கள் லிஸ்ட் எழுதும்போதே பூஜைக்கு மந்திரம் ஓதுகிற ஐயர்களின் பெயரையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் கோஷ்டிகள் நிறைய பேர் உண்டு. வேறெந்த புரோகித வேலைக்கும் போகாமல், ‘நான் முழுக்க முழுக்க சினிமா ஸ்பெஷலிஸ்டாக்கும் ‘ என்று ஜம்பம் அடித்துக் கொள்கிற ஐயர்வாள்களும் பெருகி விட்டார்கள்! இதில் கொடுமை என்னவென்றால், மேற்படி ஆசாமிகள் போடுகிற பூஜையோடு நின்று போன படங்கள் ஆயிரக்கணக்கில் தேறும். ஆனாலும் இந்த ஆசாமிகளின் ராஜ்ஜியத்தில் எப்போதும் உய்யலாலாதான்! மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. கண்ணும் காதும் வைத்தாற்போல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடும் அவர்கள் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுப்பவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அந்த வரிசையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கவிருக்கும் ‘மாஸ்கோவில் காவேரி ‘ படத்தின் துவக்கவிழாவும் நடந்திருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து திருக்குறள் கூற, ரவிவர்மன் கவிதை பாட புதுமையான முறையில் நடந்தேறியிருக்கிறது இப்படத்தின் துவக்க நாள்! இதே ஸ்டைல் இனிமேல் துவக்கப்படும் படங்களிலும் பின்பற்றப்பட்டால், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் குறையும். பெருந்தீனி ஆசாமிகளும் ஒழிவார்கள்! நடக்குமா?