பஸ் பின் சக்கரம் கழன்று ஓடியது – பயணிகள் தப்பினர்
சென்னையில் அரசு நகரப் பேருந்தின் பின்பக்க நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் 2 சக்கரங்களுடன் பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவரின் சாமர்த்தியத்தால், அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை பாரிமுனையிலிருந்து கண்ணகி நகருக்கு ஒரு பேருந்து கிளம்பியது. மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே பேருந்து வந்தபோது, திடீரென பேருந்தின் பின் சக்கர அச்சு முறிந்தது. இதனால் பின் பக்கம் உள்ள நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் நிலை குலைந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இருப்பினும் பேருந்தின் ஓட்டுநர் மிகவும் சாதுர்யமாக பேருந்தை சமாளித்து நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் கடற்கரைச் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பிப் பிழைத்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் பேருந்திலிருந்து இறங்கினர். கடற்கரைச் சாலையில் இதன் காரணமாக சில நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதித்தது.