அர்ஜென்டைனாவில் சிறைக்கு வைக்கப்பட்ட தீயில் 29 கைதிகள் பலி
அர்ஜென்டைனா சிறையில் இருந்து தப்பிக்க வழி தேடிய கைதிகள் வைத்த தீயில், 29 கைதிகள் உடல் கருகி பலியானார்கள். அர்ஜென்டைனா நாட்டில் உள்ள மத்திய மாகாணமான சாண்டியாகோ டெல் எஸ்டெரோவில் கடும் பாதுகாப்புக்கு உட்பட்ட சிறை ஒன்று உள்ளது. அந்த சிறையில் 460 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தப்பிக்க முயன்றனர். சிறைக்காவலர்கள் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர்கள் தப்பிக்க திட்டமிட்டனர். இதனால் அவர்கள் சிறைக்கு தீ வைத்தனர். சிறையில் மொத்தம் 7 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் தீ வைக்கப்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் தீ பற்றிக்கொண்டது. அங்கு அடைக்கப்பட்டு இருந்த கைதிகளில் 29 பேர் உடல் கருகி இறந்தனர். மற்றும் 10 கைதிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை பயன்படுத்தி யாரும் தப்பி ஓடவில்லை என்பதை சிறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் 200-க்கு மேற்பட்டவர்கள், சிறைச்சாலைக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்பு வேலிகளையும் கதவுகளையும் உடைக்க முயன்றனர். அவர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வெடித்தனர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் சிறைக்காவலர்கள் சிலர் காயம் அடைந்தனர்.