‘ஹோம்லி’ சினேகா
எந்த மொழிப் படமாக இருந்தாலும் நான் குடும்பப் பாங்கான கேரக்டர்களைத்தான் தேடிப் பிடித்து நடிக்கிறேன். அதுதான் எனது பலம். அதை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் சினேகா. புன்னகை இளவரசியான சினேகா, குடும்பப் பாங்கான ரோல்களில்தான் ஆரம்பத்திலிருந்தே நடித்து வந்தார். ஆனால் இடையில் திசை மாறி கிளாமர் பக்கமும் சாய்ந்தார். கிளாமராக நடித்ததற்கு சரியான வரவேற்பு இல்லாததால், இப்போதெல்லாம் மறுபடியும் முழு நேர குடும்பப் பாங்குக்கு மாறி விட்டார் சினேகா. சமீபத்தில் அவர் நடித்த பள்ளிக்கூடம் படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது. தற்போது ஷாமுடன் இன்பா, சேரனுடன் பிரிவோம் சந்திப்போம், மம்முட்டியுடன் அறுவடை என பிசியாக உள்ளார் சினேகா. இதுதவிர நிறைய விளம்பரப் படங்களிலும் கலக்குகிறார். சினிமாவில் மாடர்ன் ஆக நடிக்காவிட்டாலும் கூட விளம்பரங்களில் விதம் விதமாக, ஜொலி ஜொலிப்பாக வந்து கலக்குகிறார் சினேகா. தமிழைப் போலவே தெலுங்கிலும் சினேகா கைவசம் நிறையப் படங்கள் இருக்கிறதாம். எப்படி இப்படி என்று அவரிடம் கேட்டால், நான் எந்தப் படத்தில் நடித்தாலும் எனது கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்கும்.
சேரனுடன் நான் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அதேபோல, எஸ்.பி.சரண் தயாரிப்பில் நடிக்கவுள்ள படமும் நல்ல பெயரைக் கொடுக்கும்.
தெலுங்கில் நடித்தாலும் தமிழுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதிலும் குடும்பப் பாங்கான ரோல்களில்தான் அதிகம் நடிக்கிறேன், தொடர்ந்தும் அப்படித்தான் நடிப்பேன். அதுதான் எனது பலம். எனவே அதைக் கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் சினேகா.
தமிழில் குடும்பப் பாங்கான ரோல்களில் நடித்தாலும் கூட தெலுங்கில் கிளாமருக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அதென்ன அங்கு மட்டும் கிளாமர் என்று கேட்டால், ரசிகர்களுக்கேற்ப நடிக்கிறேன், அதில் தவறில்லையே என்கிறார் படு கில்லாடியாக.ச்சமத்து!