திருமணம் முடிந்ததும் விவகாரத்து
திருமணம் முடிந்த உடனே மண மகன் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் மணமகள் விவாகரத்து செய்து விட்டார். பீகார் மாநிலம் ராஞ்சியில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள தன்பாத்தில் இருக்கும் பதூரியா என்ற கிராமத்தில் வசிப்பவர் ரியாசாத். இவருடைய மகள் பெயர் குட்டி. இவருக்கும் இம்தியாஸ் அன்சாரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த உடனே அன்சாரி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ரியாசாத்தை தொல்லைப் படுத்தினர். மேலும் அன்சாரியின் சகோதரி ரொக்கப்பணம் மற்றும் மின்னணு பொருட்கள் கேட்டார். இதனால் கோபம் அடைந்த குட்டி அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டார் அத்துடன் கணவனை விவாகரத்து செய்யவும் முடிவெடுத்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே, வரதட்சணை கேட்டு தொல்லை கொடுப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் கணவருடன் எப்படி சந்தோஷமாக வாழ முடியும் என்று கேள்வி கேட்டு குட்டி தனது நிலையில் பிடிவாதமாக இருந்தார்.
மகள் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்த ரியாசாத் விவாகரத்துக்கு சம்மதிக்கவே, குட்டி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து மணமகன் வீட்டார் ஏற்கனவே வரதட்சணையாக வாங்கியிருந்த 60 ஆயிரம் ரூபாயை திரும்ப தர வேண்டியதாயிற்று.
குட்டியைப் போல ஒவ்வொரு பெண்ணும் இருந்து விட்டால், வரதட்சணை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.