ஓடும் ரெயிலில் சூட்கேஸ் திருட்டு: பெண் பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு…!!
கோவையை சேர்ந்த நளினி என்ற பெண் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூரில் இருந்து கோவை சென்றார்.
2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் அவர் பயணம் செய்த போது அவரது டிராலி சூட்கேஸ் திருட்டு போனது. அந்த சூட்கேசில் 132 கிராம் தங்க நகை இருந்துள்ளது.
ஷோரனூர்–ஓட்டபாலம் இடையே செல்லும்போது 2010–ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. சூட்கேஸ் திருட்டு போனது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் முதலில் நளினி தெரிவித்தார். பின்னர் கோவை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
தங்களது எல்லைக்குள் இந்த சம்பவம் நடக்கவில்லை என்று கூறி திருப்பி விடப்பட்டு ஷோரனூர் ரெயில்வே பாதுகாப்பு படையில் புகாரை செய்தார். ரெயில்வே போலீசார் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலலை.
இதையடுத்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தின் உதவியை நளினி நாடினார். மன்றத்தில் அளித்த மனுவில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையுடன் சூட்கேஸ் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ரெயில்வே துறையின் கடமையாகும். போதிய பாதுகாப்பு மற்றும் சேவை குறைவின்மையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே தெற்கு ரெயில்வே திருட்டு போன பொருட்கள் மற்றும் நகைக்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தெற்கு ரெயில்வே தரப்பில், கிரிமினல் வழக்கு கொர்னூர் போலீஸ் நிலையத்திற்கு வரும். நுகர்வோர் மன்றத்திற்கு வராது என்று பதில் மனு அளிக்கப்பட்டது. ரெயிலில் பொருட்கள் சேதம் அடைவது, காணாமல் போனால் அது ரெயில்வே பொறுப்பல்ல என்று ரெயில்வே சட்டம் உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பெஞ்ச் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த கொள்ளை சம்பவம் தெற்கு ரெயில்வே எல்லைக்குள் நடந்துள்ளது. தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. முன்பதிவு செய்த பெட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைவதை தடுப்பது டிக்கெட் பரிசோதகரின் கடமை.
அதே நேரத்தில் கொள்ளை போன நகைகளை கடையில் வாங்கியதற்கான எந்த பில் விவரத்தையும் நளினி வழங்கவில்லை. அதனால் அவருக்கு நகைக்கான இழப்பீடு வழங்க இயலாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் நளினிக்கு ரூ.30 ஆயிரம் மட்டும் இழப்பீடாக தெற்கு ரெயில்வே வழங்க வேண்டும். முன்பதிவு பெட்டியில் போதிய பாதுகாப்பு அளிக்காத காரணத்தால் நளினிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாகவும், ரூ.5 ஆயிரம் வழக்கு செலவிற்காகவும் 6 வாரத்திற்குள் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
Average Rating