குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஆசிரியர்–டிரைவர் உடல் நசுங்கி பலி…!!
கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணவேல் (வயது 52). நேற்று இவர் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் கரூருக்கு புறப்பட்டனர். காரை கரூர் முனையூரை சேர்ந்த மணிகண்டன் (28) ஓட்டினார்.
குளித்தலை அருகே கரூர்– திருச்சி நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் பழைய தண்ணீர் பந்தல் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரம் எழில்நகரை சேர்ந்த சரவணன் (32) என்பவர் கோவையில் இருந்து திருச்சியை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக 2 கார்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 2 கார்களின் முன்பகுதியும் சுக்குநூறானது. சரவணன் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்.
இதேபோல் சரவணவேல் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி, மகள் அனுசுயா(21), மகன் அஸ்வின்(17), தந்தையும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான சண்முகம் (87) மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் 2மணி நேரம் வரை போராடி காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம், டிரைவர் மணிகண்டன் ஆகியோர் இறந்தனர்.
சரவணன், சரவணவேல், ராமலட்சுமி, அனுசுயா, அஸ்வின் ஆகியோருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு நாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து நடந்ததும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதையடுத்து பொதுமக்களே போராடி காரில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
விபத்தில் பலியான மணிகண்டன், சண்முகம் ஆகியோருக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் குழுவினர் வந்திருந்தால் 2 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என்று தெரிவித்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் குழுவினர் சரியான நேரத்தில் வராதது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Average Rating