முகாமிலிருக்கும் மக்களுக்கு உடனே வீடு கொடு! மீரியபெத்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில்…!!
மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு துரிதகதியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பண்டாரவளை பஸ் நிலையம் வரை பேரணியாக சென்று, பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மண்சரிவை அடுத்து அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தமது வீடுகளை இழந்திருந்தனர்.
இந்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் இன்று வரை நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை.
இந்த வீட்டுத் திட்டத்தை விரைவில் பெற்றுத்தர அரசாங்கம் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட தோட்ட தொழிலாளர்கள் என சுமார் நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மீரியபெத்தவிற்கு வருடம் ஒன்று, மாறிய அரசும் தூக்கம் இங்கு, முகாமில் இருக்கும் மக்களுக்கு உடனே வீடு கொடு, தோட்ட தொழிலாளியின் சேம நலனை உறுதி செய், தோட்டங்களில் முறையான சுகாதார வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்,
வேலைத்தளத்தில் தொழிலாளரின் பாதுகாப்பை உறுதி செய், தோட்ட தொழிலாளிகளை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்து என்ற பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு தனியார் ஊடகவியலாளர்களினால் உணவு வழங்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸாரும் உணவு பொருட்களை வழங்கியுள்ளன்னர்.
Average Rating