வீதியோரத்தில் தவித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி..!!
அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
நியூஜேர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த சீன் போக் எனும் பொலிஸ் அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடமை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், வாகனமொன்றில் உள்ள பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கும் தகவலை அறிந்தார்.
மேற்படி பெண்ணும் அவரின் கணவரும் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, குழந்தை வெளியே வர ஆரம்பித்துள்ளது.
அதையடுத்து அப்பெண்ணின் கணவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் கொடுத்தார்.
இத்தகவல் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பரிமாறப்பட்ட போது, அப்பெண் இருக்கும் இடத்திற்கு சில கிலோமீற்றர் தொலைவிலேயே தான் இருப்பதை உணர்ந்த சீன் போக், அங்கு விரைந்து சென்றார்.
மாலை 3.58 மணிக்கு அப்பெண் இருந்த இடத்தை சீன் போக் அடைந்தார். 4.02 மணிக்கு மேற்படி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி தம்பதியினர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
தான் 3 பிள்ளைகளுக்கு தந்தையான போதிலும், இதற்குமுன் யாருக்கும் பிரசவம் பார்த்ததில்லை என சீன் போக் கூறியுள்ளார்.
“பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு முதலுதவிகளைப் புரிவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர், இது இத்தொழிலின் ஒரு பகுதி” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “பிரசவம் பார்ப்பதை எனது இரண்டாவது தொழிலாகக் கொள்வதற்கு உத்தேசமில்லை” எனவும் அவர் வேடிக்கையாக கூறியுள்ளார்.
Average Rating