சான் பெர்னார்டினோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்தார் ஓபாமா…!!
அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய சான் பெர்னார்டினோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை அதிபர் பராக் ஒபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சான் பெர்னார்டினோ நகரில் உள்ள ரீஜினல் சென்டரில், பாகிஸ்தான் வம்சாவளி வாலிபர் சயீத் ரிஸ்வான் பாரூக் மற்றும் அவரது மனைவி (பாகிஸ்தானை சேர்ந்தவர்) தஸ்பின் மாலிக் ஆகியோர் கடந்த டிசம்பர் 2-ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் பின்னர் சுட்டுக்கொன்றனர். தாக்குதல் நடத்திய தம்பதிகள் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை அதிபர் பராக் ஒபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது ஒபாமாவின் மனைவி மிச்செல்லும் உடன் இருந்தார். அமெரிக்காவில் வலிமை, ஒற்றுமை மற்றும் அன்பு நிலைப்பெற்றிருக்க செய்வதாக பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் உறுதியளித்தனர்.
மேலும் ஒபமா கூறுகையில், “பொது இடங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் என்ன நல்லது உள்ளது என்பதை நினைவு கூறும் தருணம் இது.” என்றார்.
Average Rating