குளிக்க சென்றபோது வேலூர் பாலாற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு…!!
வேலூர் தோட்டபாளையம் அருகந்தம்பூண்டி புதுத்தெருவை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் மனோஜ் என்ற கோகுல் (வயது 16). காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்தார்.
வேல்முருகன் என்பவரின் மகன் பிரசாந்த் (18), நந்தகுமார் என்பவரின் மகன் அரீஸ் (13). கோகுல், பிரசாந்த், அரீஸ் ஆகிய 3 பேரும் காட்பாடி–வேலூர் மேம்பாலத்தின்கீழ் பாலாற்றில் இறங்கினர். அவர்கள் முழங்கால் அளவு நீரில் நின்று குளித்து கொண்டு இருந்தனர்.
திடீரென கோகுலும், பிரசாந்தும் ஆழமான இடத்திற்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அரீஸ் சத்தம் போட்டு கொண்டே, ஓடிச் சென்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வந்தான். பின்னர் பதற்றத்துடன் தோட்டபாளையத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினான்.
தகவல் அறிந்த விருதம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு சுமார் 9.15 மணி அளவில் வேலூர் நேஷனல் பஸ் நிறுத்தம் சிக்னல் அருகே, கோகுல் மற்றும் பிரசாந்தின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கிய 2 பேரை மீட்டு தரும்படி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம், தாசில்தார் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கியது. அப்போது மாணவர் கோகுல் பிணமாக மீட்கப்பட்டார். பிரசாந்தின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
Average Rating