மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி..!!
கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்தவர் ஜோகேஷ் பி.பாட்டியா (வயது 32). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.
இவருடைய மனைவி ஷாரிலா பீன் பாட்டியா (30). இவர்களுக்கு தானியா பாட்டியா (3) என்ற மகள் இருக்கிறாள். இந்தநிலையில் நேற்று பகல் கூடங்குளத்தில் இருந்து ஜோகேஷ் பி. பாட்டியா தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் ஷாரிலா பீன் பாட்டியா, மகள் தானியா பாட்டியாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார்
ஜோகேஷ் பி.பாட்டியா மோட்டார் சைக்கிளில் மயிலாடி கூண்டு பாலம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மயிலாடியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி ஒரு டெம்போ சென்றது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் ஷாரிலா பீன் பாட்டியாவின் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயத்துடன் இருந்த ஜோகேஷ் பி.பாட்டியாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோகேஷ் பி.பாட்டியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 3 வயது குழந்தை தானியா பாட்டியா படுகாயம் அடைந்தாள். அந்த குழந்தையை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating