ராயபுரத்தில் வக்கீல் தற்கொலை…!!
ராயபுரம் பஜார் தெருவை சேர்ந்தவர் நவுசத்கான் (42). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே, தந்தை மற்றும் தம்பி, தங்கைகளுடன் தங்கியிருந்தார்.
அவரது குடும்பத்தினர் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தரை தளத்தின் கதவு வழியாக ரத்தம் வெளியே வந்தது.
இதனால் அச்சம் அடைந்த அவரது குடும்பத்தினர் அறையின் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து ராயபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதை தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வக்கீல் நவுசத்கான் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் இடது கையில் நரம்பு வெட்டப்பட்டிருந்தது. அதனால்தான் ரத்தம் பெருக்கெடுத்து வெளியில் வந்துள்ளது.
உடனே பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், நவுசத் கான் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு 5 பேர் காரணம் என கூறி அவர்களது பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நவுசத்கான் தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்தில் இருப்பவருக்கும், அவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. அதுவே தற்கொலைக்கு காரணம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
Average Rating