செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புவதாக கூறுவது பணம் சம்பாதிக்கும் தந்திரமா..?

Read Time:18 Minute, 5 Second

ggfஒரு வழிப் பயணமாக செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்க இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

1961இல் சோவியத் யூனியன் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. 1969ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவுக்கு மனிதனை அனுப்பியது. இவை தொடங்கி பல விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆயினும் செவ்வாய் போன்ற வேறு கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பம் இன்றுவரை நடைமுறையில் இல்லாததால் நாசா நிறுவனமே 2030இற்கு முன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லையென அறிவித்துள்ளது.

மனிதர்களை 2023 ம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றும் திட்டத்தை முதல் செவ்வாய் (Mars One) என்ற டச்சு நிறுவனம் அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் செவ்வாய்க்குப் போகலாம். கட்டணம் 5 டொலர் வரை குறைவு என்று விளம்பரப்படுத்தியதில் கடந்த 5 மாதத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து செவ்வாய்க் கிரகம் செல்வதற்காக இரண்டு இலட்சத்து 2586 பேர் வி்ண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் தோஷத்தின் அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பாரத தேசம் இரண்டாவது இடத்தில் இருப்பதுதான் நகை முரண். அறிவியலில் ஆர்வமும், சாதனை செய்யும் மனத்துடிப்பும், மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தமது பங்களிப்பை செலுத்த விரும்புவதால் செவ்வாய்க்குச் செல்ல விரும்புவதாக விண்ணப்பித்திருப்பவர்கள் சொல்கிறார்கள். அல்லது இந்த புண்ணிய தேசத்தில் வாழப்பிடிக்காமல் கிட்டத்தட்ட தற்கொலை செய்வது போன்ற முடிவாகக் கூட இந்த செவ்வாய் பயணத்தை அவர்கள் விரும்பியிருக்கலாம்.

செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒக்சைட்டு இதை செந்நிறமாகக் காட்டுவதால் செவ்வாய் எனப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளான செவ்வாய்க் கிரகத்திற்கு பூமியின் துணைக்கோளான நிலவைப் போல் இரண்டு துணைக் கோள்கள் உள்ளன.

செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆய்வுகள் மற்ற விண்வெளி ஆய்வுகளோடு அதாவது பிரபஞ்சம் உருவானது எப்படி அதன் இயங்கு விதிகள் என்ன? வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ சூழ்நிலைகள் இருக்கின்றனவா? உயிரினங்கள் வாழ்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ளும் மனித குலத்தின் அறிவுத் தேடலோடு இணைந்ததும் நீண்டகால பின்னணியைக் கொண்டதுமாகும்.

முதன் முதலில் 1960 இல் சோவியத் யூனியனின் மார்ஸ் நிக் – 1, 2 என்ற இரு விண்கலங்களை ஏவி செவ்வாய்க்கு அருகாமையில் பறந்து ஆய்வு செய்யும் திட்டம் விண்ணுக்கு ஏவும்போது தோல்வியில் முடிந்தது. பின்னர் 1962 இல் ஸ்புட்நிக் – 22, மார்ஸ் – 1 இரு விண்கலங்களை செவ்வாயின் அருகாமையில் பறக்கவும் ஸ்புட்நிக் – 24 என்ற விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்கவும் முயற்சித்து அவையும் தோல்வியில் முடிந்தன. பின்னர் அமெரிக்காவின் நாசா மாரினர் 3, 4 என்ற இரு திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாரினர் -4 முதல் முறையாக செவ்வாயின் அருகாமையில் பறந்து படங்களையும், தகவல்களையும் அனுப்பியது.

சோவியத் யூனியனின் மார்ஸ் 3 கலம் முதல் முறையாக வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. தொடர்ந்து 1973 இல் மார்ஸ் – 4, 5, 6, 7 நான்கு கலங்களை செவ்வாய்க்கு அனுப்பியதில் தரையிறக்கியதில் இரு கலங்கள் வெற்றிகரமாக தரையிறங்கின. 1975 ல் நாசா வைக்கிங் – 1, வைக்கிங் – 2 என்ற இருகலங்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

சோவியத் யூனியனின் வீ ழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவும் விண்வெளித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. இதிலிருந்தே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு பந்தாவுக்காக நடத்தப்படுகிறது என்று தெரிகிறது. 1996 ல் பாத்ஃபைண்டர், 2003ல் ஸ்பிரிட், ஆப்பர்சூனிடி போன்ற தானியங்கி சுற்றித் திரியும் கலங்களை நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. சமீபத்தில் 2011 இல் குரியாசிடி என்ற தானியங்கி குட்டி சுற்றித்திரியும் ஆய்வகத்தை நாசா அனுப்பியுள்ளது. இவையனைத்தும் செவ்வாயைப் பற்றிய அரிய தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன.

தற்போது பல நாடுகளும், தனியார் நிறுவனங்களும் தங்களது செவ்வாய் ஆய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோவும் தனது திட்டத்தை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கு மனிதர்கள் பயணம் செய்யும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் செவ்வாய்க்கான திட்டத்தால் நாட்டு மக்களின் பணம் விரயமாவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமியிலிருந்தான் அதன் தொலைவு சராசரியாக 20 கோடி கிலோமீட்டர் ஆக உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை 5.7 கோடி கிலோமீட்டர் தூரத்தில் நெருங்கிவரும். இது பூமியிலிருந்து நிலவின் தூரமான 3.84 இலட்சம் கிலோமீட்டரை விட 150 மடங்கு அதிகமாகும்.

புவியின் விட்டம், கொள்ளளவுடன் ஒப்பிட்டால் நமது பூமியில் செவ்வாயை போலுள்ள ஆறு கிரகங்களை உள்ளடக்கிவிட முடியும். புவியின் நிறையில் பத்தில் ஒரு பங்கையே தனது நிறையாகக் கொண்டுள்ள செவ்வாயின் ஈர்ப்புவிசை புவியைவிட 62 வீதம் குறைவு. அதாவது பூமியில் 100 கிலோ எடையுள்ள மனிதர் செவ்வாயில் 38 கிலோ எடையை மட்டுமே கொண்டிருப்பார். சந்திரனின் ஈர்ப்புவிசையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமான ஈர்ப்புவிசையைக் கொண்டுள்ளது. பூமியின் வளிமண்டல அழுத்தத்துடன் ஒப்பிடும் போது செவ்வாயின் வளி அழுத்தம் ஒரு வீதத்திற்கும் குறைவு தான்.

மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்ல வேண்டுமானால், இவ்வளவு தூரம் செல்வதற்கும் திரும்பி வருவதற்கான எரிபொருள், அவர்களுக்கான ஒக்சிஜன், உணவு, உடை இவற்றுடன் பாதுகாப்பு சாதனங்கள் என அதிக எடையைக் கொண்டு செல்லும் பெரிய விண்கலம் தேவை. மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப 30 தொன் எடையை சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்கிறது நாசாவின் மதிப்பீடு. குறைந்த காற்றழுத்தம் மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக செவ்வாயில் அதிக எடை கொண்ட விண்கலத்தை தரையிறக்குவது கடினம்.

விண்கலங்கள் சாதாரண விமானம் போல் மேலெழும்பி விண்ணுக்கு சென்று விடாது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட அவை வேகமாக ஒரு நொடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வேண்டும். இதற்கு ரொக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. இதற்கான ரொக்கெட்டைத் தயாரிக்க நம் புவியிலேயே குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். செவ்வாயிலிருந்து திரும்புவதற்கு அதன் விடுபடும் வேகம் ஒரு வினாடிக்கு 5 கிலோமீட்டர் அளவில் உள்ளது. இதனால் செவ்வாயிலிருந்து விண்கலம் புறப்பட அங்கும் ஒரு ரொக்கெட் தேவைப்படும்.

ஒரு வழிப் பயணமாக திட்டமிடுவதன் மூலம் கொண்டு செல்லும் எரிபொருளைக் குறைக்கலாம் என்றும் மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்வதற்கு முன்னரே தங்குவதற்கான இருப்பிடங்கள், ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பப்பட்டு தானியங்கி முறையில் நிர்மாணிக்கப்படுமென்றும் அதன் மூலம் செவ்வாய் பயண விண்கலத்தின் எடை 9 தொன்களுக்குள் வைக்கப்படுமென்றும் மார்ஸ் ஒன் தனது திட்ட வரைவில் முன் வைத்துள்ளது. இத்திட்ட வரைவு நடைமுறை சாத்தியங்களை கொண்டு மட்டுமே வரையப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

செவ்வாயில் மனிதர்கள் தங்குவதற்கும் நிர்மாணிக்கப்படும் குடில்களில் தங்குமிடம், பயிரிடும் பகுதி, உடற்பயிற்சிக்கான பகுதியுடன் பிரத்தியேக ஆய்வகமும் இருக்கும் என்றும் இக்குடில்கள் மனிதர்களுக்கு ஒக்சிஜனை உற்பத்தி செய்து கொடுப்பதோடு சூரியக் கதிர்கள், விண்கதிர்கள், புழுதிப்படலம், நுண்கிருமி தொற்று, தட்பவெப்பம் ஆகிய அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் என்றும் மார்ஸ் ஒன் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாயின் குறைவான ஈர்ப்பு விசையை சமாளிக்க விண்வெளியாளர்களுக்கு பிரத்தியேக உடையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எல்லாப் பிரச்சினைகளையும் தொழில்நுட்ப ரீதியாக தீர்க்க முடியுமென குறிப்பிட்டுள்ள மார்ஸ் ஒன், மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சில சவால்களை, அபாயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் கூறியுள்ளது.

கோள்களுக்கிடையிலான பயணத்திற்கு தேவையான பிற கோள்களின் சூழலிருந்து மனிதர்களை காக்கும் சாதனங்கள் என பல்வேறு பிரிவுகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் சாதனங்களை வடிவமைத்து வருகின்றன. அந்நிறுவனங்கள் மார்ஸ் ஒன்னுடன் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதிப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு உலகெங்கிலும் பிராந்திய வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 20 இலிருந்து 40 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் மார்ஸ் ஒன்னின் நிரந்தர விண்வெளியாளர்களாக பணியமர்த்தப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு சுமார் 7 ஆண்டு காலம் பயிற்சிக்கு பின்னர் 2022ம் ஆண்டு முதல் குழு செவ்வாய்க்கு அனுப்பப்படும். முதல் குழு சென்ற இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழு அனுப்பப்படும். இவ்விதம் ஆறு குழுக்கள் அடுத்தடுத்து அனுப்பப்படும். ஒரு குழு செவ்வாய்க்கு சென்று இறங்க பயண காலம் சுமார் 7 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரை ஆகும்.

வடிவமைக்கப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் சோதித்தறிந்து நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே மார்ஸ் ஒன் போன்ற நிறுவனங்கள் செவ்வாய்க் கிரக ஆய்வை விளம்பரப்படுத்தும் நோக்கம் என்ன? இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 6 பில்லியன் டாலர்கள் வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள மார்ஸ் ஒன் இத்திட்டத்திற்கான செலவைத் தரப்போவதில்லை. விண்ணப்பித்தோரும் தரப்போவதில்லை. இத்திட்டத்திற்கு பணம் எப்படிக் கிடைக்கும்?

கோள்களுக்கிடையிலான ஊடகக் குழுமம் என்ற இலாபநோக்கம் கொண்ட ஊடக நிறுவனத்தை மார்ஸ் ஒன் ஆரம்பித்துள்ளது. இந்த ஊடக நிறுவனத்தின் மூலமும் நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தங்களின் மூலமும் தொலைக்காட்சி விளம்பர ஒப்பந்தங்கள் மூலமும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் திரட்டப்படும் என்று மார்ஸ் ஒன்னின் நிறுவனர் பஸ் லான்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.

ஆட்களைத் தெரிவு செய்யும் போட்டி மட்டுமின்றி 7 ஆண்டு பயிற்சியை நேரடியாக ஒளிபரப்புவது, செவ்வாய்க்குச் செல்பவர்களின் பேட்டி, அவர்களது குடும்பத்தினரின் பேட்டி செவ்வாய் பயணத்தை தொலைக்காட்சியில் காட்டுவது, செவ்வாயில் இறங்குவதைக் காட்டுவது, தவிர இறுதி 24 பேர் விளம்பரங்களில் நடிக்கும் வருமானம் எனப் பல வகைகளில் பணம் ஈட்டப்படுமாம்.

சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும் ஆலோசகராகவும் உள்ளார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இவ்வூடக நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு முதலீடு செய்திருக்கின்றன.

முதலாளித்துவ அரசுகள் அறிவியல், தொழில்நுட்ப பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக வெட்டிக் குறைத்து அவற்றை தனியார் முனைவுக்கு விட்டிருக்கும் சூழலில் அறிவியல் ஆய்வுகளுக்கும், வளர்ச்சிக்கும் ரியாலிடி ஷோ, விளம்பரங்கள் என்று சந்தைப்படுத்தி தான் பணம் ஈட்ட வேண்டியிருக்கிறது.

மார்ஸ் ஒன் 2023 இல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பினாலும், அனுப்பாவிட்டாலும் கூட அது நடத்தும் ரியாலிட்டி ஷோ நடைபெற்றே தீரும். ஒரு ரியாலிடி ஷோவில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள் என்பதற்கு இந்த ‘செவ்வாய்க் கூத்து’ ஒரு சான்று

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­லத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்­படம்…!!
Next post மேக் அப் அதிகம் என்பதால் சிறுமிக்கு பஸ்ஸில் நேர்ந்த கொடுமை..!!