வள்ளியூரில் நடுரோட்டில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரம்…!!
நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக சிவகாசிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. அதில் 46 பயணிகள் இருந்தனர். காலை 7.20 மணிக்கு அந்த பஸ் வள்ளியூருக்கு வந்தது. அப்போது திடீரென பஸ் தாறுமாறாக நடுரோட்டில் ஓட தொடங்கியது.
இதையடுத்து உஷாரான பஸ் டிரைவர் நடு வழியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தார். பின்னர் டிரைவர் பழுதான பஸ்சை வள்ளியூர் டெப்போவிற்கு கொண்டு செல்வதற்காக மெதுவாக ஓட்டி சென்றார்.
அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க ஒரு டயர் கழன்று நடு ரோட்டில் ஓடியது. இதனால் டிரைவர் அங்கேயே பஸ்சை நிறுத்தி விட்டார். பின்னர் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து பழுதான பஸ்சை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக பழுதான பஸ்சில் இருந்து டிரைவர் சாமர்த்தியமாக பயணிகளை கீழே இறக்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Average Rating