புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலி…!!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்ற இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போதையில் பல இடங்களில் மின்னல் வேகத்திலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரூபன் சக்ரவர்த்தி. ஆவடியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவருடன் மெரினா கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக செனறார்.
திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை குலைந்து கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த ரூபன் சக்ரவர்த்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ரூபன் சக்ரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவம்…
பரங்கிமலை, ரவி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சவுந்தர்ராஜன் (20). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நவீனுடன் (19) புத்தாண்டு கொண்டாட பூந்தமல்லியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
நந்தம்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது நிலைதடுமாறிய அவர்கள் மோட்டார் சைக்கிளோடு சாலையோர தடுப்பு கம்பியில் மோதினர். இதில் சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். நவீன் பலத்த காயம் அடைந்தார்.
இதே போல் சென்னையில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 110 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.
Average Rating