பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கொன்று கழிவறையில் வீசிய தாய்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை–திருச்சி மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இன்று காலை 6.30 மணி அளவில் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சிகிச்சை பெறும் ஆண் நோயாளி கழிவறைக்கு சென்றார்.
அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பச்சிளம் ஆண் குழந்தையின் தலைப்பகுதி கழிவறை கோப்பைக்குள் சிக்கிய நிலையில் கால்கள் வெளியே தெரிந்தன.
இதுகுறித்து அவர் பணியில் இருந்த நர்சுகளிடம் தெரிவித்தார். அவர்கள் டாக்டர்களிடம் கூறினர். உடனே பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு கழிவறை கோப்பைக்குள் சிக்கியிருந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த ஆண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததும், பிறந்து ஒரு நாளே ஆனது என்பதும் தெரிய வந்தது.
பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களில் ஆண் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. எனவே எங்கோ பிறந்த ஆண் குழந்தையை கொன்று அதனை ஆஸ்பத்திரியின் கழிவறையில் வீசியது தெரியவந்துள்ளது.
குழந்தையை கொண்டு வந்து வீசியது யார்? என்பதை அறிய ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு மூதாட்டியும், இளம் பெண்ணும் ஆஸ்பத்திரிக்குள் நுழைவதும், அந்த இளம்பெண் தோளில் சால்வை போட்டு மூடியிருப்பதும் தெரிய வந்தது.
அந்த சால்வைக்குள் குழந்தையை மறைத்து எடுத்து வந்து கழிவறையில் வீசிவிட்டு அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தையை கழிவறையில் வீசிவிட்டு தப்பிச்சென்ற அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Average Rating