மேட்டுப்பாளையத்தில் குப்பை தொட்டியில் பெண் குழந்தை பிணம்: தாயிடம் போலீசார் விசாரணை..!!
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ளது நெல்லித்துறை. இங்கு ரெயில்வே கேட் அருகேயுள்ள குப்பைத்தொட்டியை நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. அந்த சமயத்தில் துப்புரவு ஊழியர்கள் அந்த பகுதிக்கு சுத்தம் செய்யும் பணிக்காக வந்தனர்.
நாய்கள் குப்பைத் தொட்டியை சுற்றி வருவதைப் பார்த்த அவர்கள் சந்தேகமடைந்தனர். குப்பைத்தொட்டிக்குள் எட்டிப்பார்த்த போது குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை உடல் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக மேஸ்திரி பாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், வெள்ளிங்கிரி, ஏட்டுகள் வேல்முருகன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குப்பைத் தொட்டியில் அந்த குழந்தையை வீசிச் சென்ற பெண் யார்? என்பதை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் யாருக்காவது பெண் குழந்தை பிறந்ததா? என்பதை அறிய அங்கு சென்றனர். மேலும் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.
அப்போது கடந்த 3–ந் தேதி ஆட்டோவில் வந்து ஒரு பெண் இறங்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார்? என்பதை அறிய அன்று பணியில் இருந்த நர்சுகளிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் 3–ந் தேதி இரவு ஒரு பெண் ஆஸ்பத்திரிக்கு வந்தார். தனக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. வரும் வழியில் அந்த குழந்தை எங்கு விழுந்தது? என்று தெரியவில்லை என்றார்.
குறை பிரசவத்தில் குழந்தை பிறந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தோம் என்றனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள பட்டியலில் பதிவான பெயர் விவரப்படி அந்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. தவறான தொடர்பால் கரு உண்டாகி அந்த குழந்தை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்த போது குழந்தை இறந்ததா? இல்லை உண்மையிலேயே அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததா? என்று அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Average Rating