காதல் போட்டியில் மாணவர்கள் கத்தியால் குத்தியதாக பிளஸ்–2 மாணவி நாடகம்..!!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்த மாணவி தேவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதல் போட்டியில் பிளஸ் – 2 மாணவர்கள் 3 பேர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியானது.
மாணவி தேவியை 3 மாணவர்கள் காதலித்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பள்ளிக்கு சீருடையில் சென்ற போதே அவரை வழி மறித்து மாணவர்கள் கத்தியால் குத்தியதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தேவி, வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு இச்சம்பவம் குறித்து அதிரடி விசாரணை மேற்கொண்டார்.
மாணவி தேவியின் வலது கையில், கோடு போட்டது போன்று சிறிய காயமே இருந்தது. இதைதொடர்ந்து டாக்டர் ஒருவரிடம் சிகிச்கைக்காக அழைத்துச் சென்றனர். அதனை பரிசோதித்த டாக்டர் கையில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்க்கும் போது, வேறு யாரோ, குத்தியது போல தெரியவில்லை. ஹேர் பின்னால், மாணவியே கையால் கிழித்துக் கொண்டது போல இருப்பதாக தெரிவித்தார்.
இதன் மூலம் தேவி தன்னைத்தானே ஹேர் பின்னால் கையில் குத்தி காயத்தை ஏற்படுத்தி விட்டு நாடகமாடியது அம்பலமானது. இருப்பினும் போலீசார் இந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைக்காமல் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர்.
மாணவி தேவி ஒரு பள்ளியிலும் அவரை கத்தியால் குத்தியதாக புகார் கூறப்பட்டிருந்த 3 மாணவர்களும் வேறு பள்ளியிலும் படித்து வருகிறார்கள். இதையடுத்து இன்று காலையில் மாணவி தேவியை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அழைத்துச் சென்று மாணவர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
புகாருக்குள்ளான பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரின் அனுமதியை பெற்று பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவர்களை நேரில் காட்டியும் போட்டோவை காண்பித்தும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தேவியால், இந்த மாணவர்தான் தன்னை கத்தியால் குத்தினார் என்பதை அடையாளம் காட்ட முடியவில்லை.
இது தொடர்பான போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தேவி திணறினார். இதன் மூலம் அவரது நாடகம் மேலும் உறுதியானது.
தேவி மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அந்த மாணவருடனான காதலை அவர் முறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட மாணவரை போலீசில் மாட்டிவிடும் எண்ணத்தில் தேவி இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் இந்த காதல் விவகாரம் பற்றியோ, அந்த மாணவர் யார்? என்பது பற்றியோ இதுவரை தேவி வாய் திறக்கவில்லை. போலீசார் நடத்திய விசாரணையிலேயே தேவியின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.
Average Rating