கூடலூர் அருகே விவசாயி குடும்பத்தினர் சாவில் மர்மம்: போலீசார் தீவிர விசாரணை…!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள குச்சி முச்சி மூக்கூரைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 46). விவசாயியான இவர் தனது மனைவி லட்சுமி (35), மகள் மஞ்சுபாரதி (17) ஆகியோருடன் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் தேயிலை தோட்டத்தில் வசித்து வந்தார்.
மஞ்சுபாரதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
மஞ்சுபாரதியுடன் படிக்கும் மாணவி வழக்கம் போல் அவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த காகிதத்தில் ‘உள்ளே அனைவரும் இறந்து விட்டனர், போலீசை அழைக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
பதறிப்போன மாணவி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறினார். அவர்கள் தேவர்சோலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு வெற்றிவேல், அவரது மனைவி, மகள் இறந்து கிடந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 2 நாய்களும் இறந்து கிடந்தன.
போலீஸ் விசாரணையில் வெற்றிவேல் தனது மனைவி, மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வெற்றிவேல் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் ‘எங்கள் இருவரது பெற்றோரும் இறந்து விட்டனர். வாழும் காலத்தில் உதவி செய்யாத உறவினர்களிடம் எங்கள் உடல்களை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க செலவில் உடல்களை அடக்கம் செய்து விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வெற்றிவேல் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் யாரும் வருவதில்லை.
கரூர், கோவை மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்களிடம் வெற்றிவேல் ரூ.19 லட்சம் வரை வட்டிக்கு பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. அவர்கள் நெருக்கடி கொடுக்கவே வெற்றிவேல் இந்த பரிதாப முடிவை மேற்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆனாலும் வெற்றிவேலின் தேயிலை எஸ்டேட் மற்றும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அப்படியிருக்க ரூ.19 லட்சம் கடனுக்காக அவர் இந்த துயர முடிவை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் மனைவி, மகளை கொன்று விட்டு வெற்றிவேல் தற்கொலை செய்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இருவரையும் ஒரே நேரத்தில் கழுத்தை நெரித்து கொன்றிருக்க முடியாது.
மேலும் ஒருவரை கொல்லும் போது மற்றொருவர் கண்டிப்பாக சத்தம் போட்டிருப்பார். ஆனால் வெற்றிவேல் வீட்டில் இருந்து அப்படி சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தான் இந்த மர்மங்களுக்கு பதில் கிடைக்கும். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating