குஷ்புவுக்கு மீண்டும் இன்னொரு சிக்கல்!
மாக்ஸிம் பத்திரிக்கையில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் வெளியானது தொடர்பான வழக்கில், சென்னை காவல்துறைக்கும், நடிகை குஷ்புவுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் தனது பதிப்பைத் தொடங்கிய மாக்ஸிம் இதழ், முதல் இதழில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாக்ஸிம் இதழின் ஆசிரியர் மற்றும் தென்னிந்தியாவுக்கான சர்க்குலேஷன் மேனேஜர் பசல் ஹூசேன் கான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பசன் ஹுசேன் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நான் மாக்ஸிம் இதழின் சர்க்குலேஷன் மேனேஜராக மட்டுமே உள்ளேன். அந்த இதழ் லண்டனிலிருந்து வெளியாகிறது. எனவே அந்த இதழில் இடம் பெறும் விஷயங்களுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி கே.என்.பாஷா, கானின் மனுவை விசாரணைக்கு ஏற்றார். மேலும் அவர் மீது 2 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும், நடிகை குஷ்பு, சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை ஆகியோருக்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்காக கான் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டார்.