48 வாழைப்பழங்களை உண்ண வைத்து திருடனிடமிருந்து தங்கத்தை மீட்ட பொலிஸார்…!!
இந்தியாவின் மும்பை பகுதியில் திருடனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்கிலியை 48 வாழைப்பழங்களை உண்ண வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கட்கோபரில் கடந்த வாரம் ஒரு பெண்ணிடமிருந்து 25 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஒரு நபர் தப்பியோடியுள்ளார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கோபி ஆர் கவாரே (25) என்ற அந்த நபர் வதாலா பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பயத்தில் அந்த சங்கிலியை விழுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அந்தப் பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச்சங்கிலி அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவரை ஒரு கூடை வாழைப்பழங்களை (48) கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளனர். அவர் மலம் கழித்தபோது, அந்த சங்கிலி வெளியில் வந்துள்ளது. பின்னர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
Average Rating