ஓடும் ரயில் கதவில் சிக்கிய உடுப்பு: பல மைல்கள் இழுத்து சென்றதால் பலியான வாலிபர்…!!
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபரின் உடுப்பு கதவில் சிக்கிக்கொண்டதால் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் La Motte-Picquet-Grenelle என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த நிலையத்திற்கு வழக்கமாக வரும் ரயில் ஒன்று நேற்று முன் தினம் வந்து பயணிகள் இறங்குவதற்காக சில வினாடிகள் நின்றுள்ளது.
அப்போது, 24 வயதுடைய வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது ரயில் மெதுவாக புறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் கதவுகள் தானாக மூடி திறக்கும் என்பதால், அந்த வாலிபர் இறங்கும் நேரத்தில் கதவு சட்டென மூடியுள்ளது.
இதில் அவருடைய மேல் உடுப்பு கதவின் இடுக்கில் சிக்கிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் அவரால் உடுப்பை மீட்க முடியாததால் நடைபாதையில் மோதியாறு இழுத்துச்செல்லப்பட்டார்.
துரதிஷ்டவசமாக இதனை ஓட்டுனர் அல்லது மற்ற பயணிகள் கூட கவனிக்க வில்லை. சில மைல்கள் தொலைவில் உள்ள Dupleix என்ற ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு தான் ஓட்டுனர் இதனை கண்டுள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் வந்து சோதித்து பார்த்தபோது, நடைபாதை மீது உராய்ந்து உடல் முழுவதும் தேய்ந்து மோசமான காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அந்த வாலிபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
பொதுவாக ரயில் கதவுகள் அனைத்தும் மூடிய பிறகே ரயில்கள் புறப்படும். ஆனால், சம்பவத்தன்று கதவு மூடுவதற்கு முன்னதாகவே ரயில் புறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating