அந்நிய செலாவணி விகித மாற்றத்தினால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம்…!!
அந்நிய செலாவணி விகிதம் மாற்றமடைவதன் ஊடாக எதிர்காலத்தில் நாட்டினுள் வாகனங்களின் விலை 2 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் ஜப்பான் யென்னின் பெறுமதி மாற்றம் என்பன வாகன விலை அதிகரிப்பிற்குக் காரணமாக அமையுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித்திருத்தம் காரணமாக வாகனங்களின் விலை பாரிய தொகையினால் அதிகரித்தது.
இதனையடுத்து, பெரும்பாலான வாகன இறக்குமதியாளர்கள், வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நேற்று முன்தினம் வரை, வாகன இறக்குமதிக்கு அல்லது துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் வாகனக் கடன்பத்திர கணக்குத் திறந்துள்ள அனைவருக்கும் நடைமுறையிலிருந்த தீர்வையின் பிரகாரம் வாகனங்களை விடுவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை.
எனினும், நிதியமைச்சினால் நேற்று முன்தினம் (13) விடுக்கப்பட்ட பரிந்துரைக்கமைய தனிப்பட்ட தேவைக்கான வாகனங்களை இறக்குமதி செய்தவர்களுக்கே அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இறக்குமதி செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்காக மேலதிகக் கட்டணத்தை வாகன இறக்குமதியாளர்கள் செலுத்துவதற்கு நேரிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட வரித்திருத்தம் காரணமாக வாகனங்களின் விலைகள் கணிசமாக உயர்வடையும் என்பதுடன், குறிப்பாக இலத்திரனியல் கார் 25 இலட்சம் ரூபாவினாலும், வேன் சுமார் 30 இலட்சம் ரூபாவினாலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Average Rating