பர்கினா பாசோ நாட்டின் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி…!!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை எல்லைகளாக கொண்டது.
இதன் தலைநகரம் குயாகாடோகு. இங்கு 147 அறைகள் கொண்ட ஒரு நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ஐ.நா. ஊழியர்களும், மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா பயணிகளும் தங்கியிருந்தனர். நேற்று அங்கு தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்தனர்.
பின்னர், அங்கிருந்த அறைகளை கைப்பற்றி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசாரும், ராணுவமும் விரைந்து சென்றனர்.
ஏற்கனவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் ராணுவமும் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஓட்டலில் தங்கியிருந்த 20 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு அல்–கொய்தாவின் ‘இஸ்லாமிக் மாக்ரேப்’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
ஓட்டலுக்குள் தாக்குதல் நடத்த புகுந்த தீவிரவாதிகள் முகமூடி அணிந்திருந்தனர். ஓட்டலில் நுழையும் முன்பு வாசலில் கார் குண்டு தாக்குதல் நடத்தி கவனத்தை சிதறடித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த ஓட்டலுக்குள் இன்னும் நிறைய பேர் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளனர்.
எனவே, அவர்களை மீட்க தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது.
Average Rating