82 வருடங்களாக சிறு விபத்து ஏதுமின்றி கம்பீரமாக கார் ஓட்டும் இங்கிலாந்தின் 103 வயது தாத்தா…!!
நமக்கு நன்றாக கண் பார்வை இருந்தும், திடகார்த்தமான உடல்நிலை இருந்தும் எந்தவித விபத்துமின்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது மிகக்கடினம். ஆனால், இங்கிலாந்தில் உள்ள 103 வயது தாத்தா இன்றைய தனது முதிர்ந்த காலத்திலும் விபத்து ஏதுமன்றி கம்பீரமாக கார் ஓட்டி வருகிறார்.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்-ல் வசித்து வருபவர் ஜியாவான்னி ரோஸ்ஸோ. இவருக்கு மூன்று குழந்தைகளும், நான்கு பேரக்குழந்தைகளும் உள்ளனர். 23 வருடமாக மிட்சுபிஷி லேன்சர் காரை தன்னுடன் வைத்துள்ளார். இந்த காரில்தான் தனது மனைவியை அடக்கம் செய்துள்ள இடத்திற்கு தினந்தோறும் சென்று வருகிறார்.
இவர்தான் இங்கிலாந்தில் உள்ள மிக வயதான டிரைவர் என்று அறியப்படுகிறது. 82 வருடங்கள் கார் ஓட்டி வரும் இவர் இரண்டு முறை மட்டுமே வேகமாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்டியுள்ளார். அதன்பின் எந்தவொரு விபத்து சம்பவத்திலும் அவர் ஈடுபட்டதில்லை.
இதுகுறித்து 103 வயது தாத்தா குறித்து கூறுகையில் ‘‘நான் என்னுடைய 20 வயதில் இருந்தே கார் ஓட்டி வருகிறேன். நான் இங்கிலாந்திற்கு வருமுன் இத்தாலி ராணுவத்தில் நான் கிளார்க்காக பணியாற்றினேன். அப்போது இருந்து நான் ராணுவ வாகனங்களை ஓட்டி வருகிறேன். இங்கிலாந்திற்கு வந்த பிறகு பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டி வருகிறேன்’’ என்றார்.
1953-ம் ஆண்டு ரோஸ்ஸோ இங்கிலாந்தில் டிரைவிங் லைசென்சிற்காக கார் ஓட்டி காட்டினார். அதன்முன் இத்தாலி ராணுவ லைசென்சை வைத்து 20 வருடத்திற்கு மேல் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். 1962-ம் ஆண்டு விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 17 வயது முடிவடைந்தவர்கள் லைசென்ஸ் பெறலாம். ஆனால் 70 வயது வரை கார் ஓட்டலாம். அதன்பின் மூன்று வருடத்திற்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும்.
Average Rating