பருவநிலையை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது…!!
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது.
சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் கடந்த மாதம் புறப்பட்டு சென்றது. அதில் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான 11 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.
பூமியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற அந்த ராக்கெட்டின் 156 அடி நீளம்கொண்ட முதல்நிலை உந்து இயந்திரம் (first stage rocket) ராக்கெட்டில் இருந்து கழன்று, பிரிந்து, பத்தே நிமிடங்களில் பூமியை நோக்கி பத்திரமாக திரும்பி வந்தது. இதைக்கண்ட ஆர்ப்காம் நிறுவன பொறியாளர்களும், பணியாளர்களும் உற்சாகமிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து துள்ளிக்குதித்தனர்.
ஆரஞ்சுநிற தீப்பந்தாக ஒளியை உமிழ்ந்தபடி பூமியை நோக்கி திரும்பிய “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” தானாகவே தரையிறங்கும் கால்களை விரித்தபடி, ஏவப்பட்ட இடத்தில் இருந்து தெற்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் பத்திரமாக வந்து அமர்ந்தது. இந்த நிகழ்ச்சியை மேற்கத்திய ஊடகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லாக குறிப்பிட்டன.
அதேவகையிலான “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் மூலம் பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியா அருகேயுள்ள வான்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் செயற்கைக்கோளை சுமந்தபடி திட்டமிட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத் தயாரிப்பான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளின் ‘டிராகன் கேப்ஸ்யூல்கள்’ மூலமாக நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு அனுப்ப முடிவு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட்டை பத்திரமாக கடலில் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
Average Rating