காணும் பொங்கலின் போது ஊர் கூட்டத்தில் தொழிலாளி குத்திக் கொலை..!!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்மாள் கிராமம் மேலத்தெருவில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் கூட்டம் அங்குள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
வரவு, செலவு கணக்கு முடிந்த பின்னர் புதிய நாட்டாண்மை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது வாய் தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ரமேஷ் (45) என்ற தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதனை தடுக்க வந்த குமார் என்பவரையும் குத்தினர். காயம் அடைந்த 2 பேரையும் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயம் அடைந்த குமாரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருவையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. சுகுமாறன், இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ், ராஜேந்திரன், சேகர், யோகராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் ஊர் கூட்டத்தில் ரஞ்சித் மற்றும் பலர் சேர்ந்து ரமேஷ் மற்றும் குமாரை குத்தியது தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு கவிதா என்ற மனைவியும், ராஜூ, ரஞ்சித், ராகுல் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
Average Rating