எம்பிலிப்பிட்டிய சம்பவம் குறித்த விசாரணைக்காக பொலிஸ் குழு திங்களன்று எம்பிலிப்பிட்டிய விஜயம்…!!
எம்பிலிப்பிட்டிய நகரில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை அந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்றுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த அதிகாரிகள் எம்பிலியப்பிட்டிய பகுதிக்கு அனுப்பப்படுவதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டார்.
இந்த குழுவினரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை அடிப்படையாக வைத்து பொலிஸார் தவறிழைத்திருப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருடன் விரிவாக ஆணைக்குழு கலந்துரையாடியதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.
இதற்கமைவாகவே ஆணைக்குழுவின் மூவரடங்கிய குழுவொன்றை அந்த பகுதிக்கு அனுப்பி சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி, அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது சம்பவத்தின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் மற்றும் பொலிஸார் கடமையை உரியவாறு முன்னெடுக்கத் தவறியுள்ளார்களா என்ற இரண்டு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Average Rating