வேப்பந்தட்டை அருகே வீட்டுக்கு வந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு வெடித்து மூதாட்டி சாவு…!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவரது மகன் சண்முகம். அரசு பள்ளி ஆசிரியர். முத்தம்மாள் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை முத்தம்மாள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் முத்தம்மாளின் வீட்டு தாழ்வாரத்தில் மர்ம பெட்டி ஒன்றை வைத்து விட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் முத்தம்மாள் வீட்டிற்கு திரும்பினார். வீட்டு தாழ்வாரத்தில் இருந்த மரப்பெட்டியை கண்டு, அதனை திறந்தார். அப்போது அதில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் தூக்கிவீசப்பட்ட முத்தம்மாள் படுகாயமடைந்தார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் முத்தம்மாளை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து முத்தம்மாளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வீட்டு தாழ்வாரத்தில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார்?, எதற்காக வைத்தனர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating