சூலூர் அருகே மனநலம் பாதித்த மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்…!!
கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காங்கயம்பாளையம் கருமாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மகாலட்சுமி.
இவர்களது மகன் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு வசந்தி என்ற மனைவியும், குரு பிரசாத்(9) என்ற மகனும் உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ராஜேந்திரனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. எனவே வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.
வீட்டிலிருந்த அவர் திடீர் திடீரென்று மனைவி மற்றும் மகனை அடித்து உதைப்பார். மேலும் பக்கத்து வீடுகளுக்குச் சென்று ரகளை செய்வார்.
இதனால் மனமுடைந்த வசந்தி தனது மகனை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
ராஜேந்திரனை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்களின் அறிவுரைப்படி அவரை கவனித்து வந்தனர். இருப்பினும் ராஜேந்திரனின் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தெருவில் ரகளை செய்யும் அவர் பக்கத்து வீடுகளுக்கும் சென்று தகராறு செய்தார். இதனால் அவர்கள் கிருஷ்ணசாமியை சத்தம் போட்டனர். ராஜேந்திரனை எங்காவது கொண்டு சேர்க்க வேண்டியது தானே என்று கூறினர்.
இதனால் ராஜேந்திரனின் பெற்றோர் மிகவும் மனமுடைந்தனர். இந்த நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேந்திரன் இன்று அதிகாலை எழுந்தார்.
திடீரென்று தனது பெற்றோரை அடித்து உதைத்தார். அவர்கள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். பொறுமையாக இரு என்று கெஞ்சினர். ஆனால் ராஜேந்திரன் கண்மூடித்தனமாக பெற்றோரை தாக்கினார்.
இதனால் மனம் வெறுத்துப்போன அவர்கள் வீட்டில் கிடந்த சுத்தியல் மற்றும் கம்பியை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் இறந்தார்.
இந்த தகவல் சூலூர் போலீசுக்கு தெரியவந்தது. அவர்கள் விரைந்து சென்று கிருஷ்ணசாமி, மகாலட்சுமியை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பெற்றோரே அடித்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating