ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனின் 185ஆவது குருபூசை விழா…!!
கண்டியை ஆட்சி புரிந்த கடைசி மன்னனான ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் 185 ஆவது குருபூசை விழா நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மன்னரின் முத்து மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக மன்னரின் எட்டாவது பரம்பரையைச் சேர்ந்தவரும் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் குடும்ப ஒருங்கிணைப்பாளருமான வி. அசோக் ராஜா மெட்ரோவுக்கு தகவல்களை வழங்கியுள்ளார்.
இவ்விழாவில் மன்னரின் ஆறாவது பரம்பரையைச் சேர்ந்த திருமதி மீனாட்சி அம்மாள் (97 வயது) தலைமை வகிக்க உள்ளதுடன், மதுரை சென்னை மற்றும் வேலூரில் வசிக்கும் மன்னரின் வாரிசுகளும் இக்குருபூஜையில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக வி. அசோக்ராஜா மேலும் தகவல்களை வழங்கியுள்ளார்.
18-/02/1815இல் ஆங்கிலேயரால் விக்ரம இராஜசிங்கன் கைது செய்யப்பட்டு 06.03.1815இல் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு கொழும்பு கோட்டை (இன்று சிலிங்கோ ஹவுஸ்) ராஜபக்ஷ வளவில் சிறை வைக்கப்பட்டார்.
பின்னர் 24/01/1816இல் மன்னரும் அவரின் துணைவியர்கள் நான்கு பேரும் கொழும்பு காலிமுகத்திடலிலிருந்து கோர்ஸ்வலிஸ் கப்பல் மூலமாக சென்னை அழைத்துச் செல்லப்பட்டு வேலூரில் சிறை வைக்கப்பட்டனர். கப்பல் சென்னை துறைமுகத்தை எட்டிய தருணத்தில் பட்டத்து ராணி சாவித்திரி தேவி இறந்து விட்டார்.
பின்னர் 1832 ஜனவரி 30இல் தனது 50ஆவது வயதில் மன்னர் வேலூர் சிறையில் மரணமானார்.
Average Rating