சங்கரன் கோவில் அருகே இளம்பெண் மர்மச்சாவு: தந்தை போலீசில் புகார்…!!
சங்கரன்கோவில் அருகே உள்ள கரடி குளத்தை சேர்ந்த குருசாமி. இவரது மகள் திருமேனி (வயது 24). இவருக்கும் வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திருமேனி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள் சமரசத்திற்கு பிறகு கடந்த 5 மாதத்திற்கு பிறகு திருமேனி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். தொடர்ந்து இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று திருமேனி அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் விரைந்து வந்து திருமேனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருமேனியின் தந்தை குருசாமி சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமேனி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமேனிக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating