ஏமனில் உச்சகட்டத்தை நெருங்கும் உள்நாட்டுப் போர்: 30 பேர் பலி…!!
ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.
ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அதிபர் மன்சூர் ஹாதி நாடினார். இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் சனாவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டாயிஸ் நகரில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 30 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating