காதல் மனைவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: உடற்கல்வி ஆசிரியர் கண்ணீர்…!!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வீதிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கொண்டப்பன்(வயது 27). தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
நான் தினமும் பள்ளிக்கு செல்லும் போது திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை சந்திப்பேன். அவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
பஸ்சுக்கு காத்து நிற்கும் அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததால் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. எங்களின் காதல் விவகாரம் வெளியே தெரிய வரவே எனது காதலியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணம். திருமணம் செய்வது என்ற முடிவில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த 5.11.2015 அன்று திருப்பூர் அழகுமலை கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.
திருமணத்துக்கு பின்னர் அவினாசி போலீசில் தஞ்சமடைந்தோம். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசினர். அப்போது எனது காதலியின் பெற்றோர் அவருக்கு இன்னும் 18 வயதாகவில்லை என்று போலி சான்றிதழை காட்டி அழைத்துச் சென்று விட்டனர். அதன் பின்னர் நாங்கள் செல்போனில் பேசிக்கொண்டோம். அப்போது எனது காதலி சிறிது காலம் அமைதியாக இரு என்று கேட்டுக்கொண்டார். அதை நானும் ஏற்றுக்கொண்டேன்.
நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். நான் எதையும் பொருட்படுத்தாது காதலியின் வேண்டுகோளை ஏற்று அமைதியாக இருந்து வந்தேன்.
இந்த நிலையில் நாளை எனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதை அறிந்தேன். எனது காதல் மனைவிக்கு நாளை நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுகிறேன்.
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Average Rating