உசிலம்பட்டியில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து: தாய்–மகன் படுகாயம்…!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 2–வது வார்டு போஸ்ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது44).
அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (34). இவர்களது மகன் மிதுன்ரோசன் (8), 2–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை சந்திரன் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டார். கலைவாணி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் காலியாகிவிட்டது.
உடனே வீட்டில் இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரை பொருத்துவதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வம் (50) என்பவரை அழைத்து உள்ளார். அவரும் புதிய கியாஸ் சிலிண்டரை ரெகுலேட்டருடன் பொருத்தி உள்ளார். ஆனால் சரியாக பொருத்தப்படாததால் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததாக தெரிகிறது. இதை அறியாத கலைவாணி அடுப்பை பற்றவைத்த போது குபீரென தீ பிடித்தது. இதில் கலைவாணி, அருகில் இருந்த மிதுன்ரோசன் மற்றும் செல்வம் ஆகியோர் உடலில் தீ பிடித்தது. தீக்காயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து 3 பேரையும் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் தாய்–மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை சுப்பிரமணியம், சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Average Rating