மணப்பாறை அருகே நள்ளிரவில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை…!!
மணப்பாறையில் போலீஸ் நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் ரூ.10 லட்சம் பணம் கொள்ளை போனது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலையம் அருகே சையது முகமது என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் அனைத்து விதமான ரெடிமேட் துணிகள், காலணிகள், கிப்ட் வகைகள், வாட்ச்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த கடையில் சுமார் 50–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடையில் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று வியாபாரம் முடிந்த பின்னர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். இன்று காலை சையது முகமது கடையின் பக்கத்து கடைக்காரர் கடையை திறக்க வந்த போது சையது முகமது கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சையது முகமது பதறி அடித்தவாறு கடைக்கு ஓடி வந்தார். அப்போது கடையின் முன்பகுதியில் இருந்த ஷட்டர் மற்றும் உள் பகுதியில் இருந்த 2 ஷட்டர்களும் உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது.
மேலும் ஜவுளிக் கடையின் அலுவலக கதவும் உடைக்கப்பட்டு அங்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்கு சையது முகமது தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அக்கம் பக்கத்தினரரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் பின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இன்னொரு கதவை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
இதனால் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பியுள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் மணப்பாறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating