திருச்சி அருகே ஜல்லி லாரி–கார் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பலி…!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபர். இவரும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியான்செட்டிப்பட்டி 2–வது வார்டை சேர்ந்த மணிகண்டனும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.
நேற்று காலை வேலை விஷயமாக திருச்சிக்கு வந்து விட்டு ஜீயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருவரும் சென்றனர். அதன் பிறகு இருவரும் நேற்றிரவு காரில் கரூர் வழியாக திண்டுக்கல்லுக்கு திரும்பினர்.
காரை முகமது அலி ஓட்டினார். நள்ளிரவு 1.30மணிக்கு கார் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே முக்கொம்பு அடுத்த திண்டுக்கரை அருகே வளைவில் சென்றது. அப்போது எதிரே ஜல்லிக்கல் ஏற்றிக்கொண்டு கரூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி முழுவதும் லாரிக்குள் புகுந்து நசுங்கியது. இதில் முன்சீட்டில் இருந்த இருவரது உடல்களும் சிதைந்தது. சம்பவ இடத்திலேயே முகமது அலியும், மணிகண்டனும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். லாரிக்குள் சிக்கி கிடந்த இருவரது உடல்களையும் போராடி மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள இருவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி விட்டது. மணிகண்டனுக்கு மஞ்சு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
ஜல்லி லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating