தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: காதல் ஜோடி பலி…!!
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதி காதலியுடன் வாலிபர் பலியானார்.
தஞ்சை பர்மா காலனி 4–வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செங்குட்டுவன் (25). பட்டதாரி. தற்போது டைல்ஸ் வேலை பார்த்து வந்தார்.
திருவோணம் அருகே உள்ள புது விடுதி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் வெண்ணிலா (22). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் செங்குட்டுவனும் காதலித்து வந்தனர்.
வெண்ணிலா தனது சொந்த வேலை காரணமாக சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்சி வந்தார். அப்போது காதலனுக்கு போன் செய்து திருச்சி வருமாறு அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து செங்குட்டுவனும் மோட்டார் சைக்கிளில் திருச்சி சென்றார். பின்னர் இருவரும் தஞ்சை திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர்கள் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தனர்.
அப்போது பின்னால் வந்த மீன் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செங்குட்டுவன் அவரது காதலி வெண்ணிலா ஆகியோர் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலே இறந்தனர்.
இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெரியார், சப்–இன்ஸ்பெக்டர் மாதவி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கார்மேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பலியான வாலிபர்–காதலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த மாணவி வெண்ணிலா படித்து வந்த கல்லூரி மாணவிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Average Rating