திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..!!
சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியின் பின் புறம், அரசு விரைவு பஸ் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய பஸ், அப்பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ் பயணிகள் 22 பேர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகர், சப்-இன்ஸ்பெக் டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு இருங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:–
சேகர் (வயது 32), பஸ் டிரைவர், மதுரை திருமங்கலம், கமலகண்ணன் (38), மதுரை, சுரேஷ் (28), பொன்னமராவதி, முருகன் (22), ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, பாத்திமா (22), சென்னை போரூர், மஸ்தான் அலி (28), திருபுவனம், ராபிகாபீவி (35), முகமது கதிஜா (12), கோவிந்த சாமி (22), தென்னிலைப்பட்டி, இலுப்பூர், சண்முகம் (35), பூலாங்குளத்துப்பட்டி, ஸ்ரீ ரங்கம், இஸ்மான்பீவி, ஆலங்குளம், நெல்லை மாவட்டம், ரமேஷ் (22), வானகரம், சென்னை, ஜெனி (24), பெத்தநாடார்பட்டி, நெல்லை. இவர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating