கரூர் அருகே ஓடும் ரெயிலில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து இறங்கினர்…!!
கரூரில் இருந்து குளித்தலை, பெட்டவாய்த்தலை வழியாக திருச்சிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 9 பெட்டிகளுடன் முன்பகுதி, பின்பகுதி மற்றும் நடுப்பகுதியில் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6.50 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் தினமும் திருச்சிக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்வார்கள்.
இன்று காலை அந்த ரெயில் கரூரில் இருந்து வழக்கம்போல் புறப்பட்டு திருச்சிக்கு சென்றது. இன்று விடுமுறை நாள் என்பதால் கரூர் அருகே உள்ள மாயனூர் அணை, திருச்சி முக்கொம்பு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக பலர் பயணித்தனர்.
கரூர் ரெயில் நிலையத்தை தாண்டி 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரராக்கியம் என்ற பகுதியில் செல்லும் போது திடீரென ரெயிலின் நடுப்பகுதி என்ஜினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சுதாரித்து கொண்டு வீரராக்கியம் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயில் நிலைய ஊழியர்கள் மற்றும் என்ஜின் டிரைவர்கள், பயணிகள் சேர்ந்து என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் என்ஜினில் இருந்த பேட்டரிகள் மற்றும் அருகில் இருந்த பெட்டியில் உள்ள மின்விசிறிகள், இருக்கைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து காரணமாக ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த ரெயில் வீரராக்கியம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் ரெயில் இயக்கப்படாததால் அதில் பயணம் செய்து வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஸ்கள்மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
என்ஜினில் தீ பிடித்தது எப்படி? என்று தெரியவில்லை. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating